கோவை: கேட்காமலேயே ஐந்தாயிரம் ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை இன்று அரசு வழங்கியுள்ள நிலையில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தங்களைக் கண்டுகொள்ளவில்லை என அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 11வது நாளான இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கி உள்ளனர். கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நாள்தோறும் இரவு முழுவதும் அங்கேயே படுத்து உறங்கி சமையல் செய்து உணவருந்தி போராட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கி உள்ளனர்.
காலமுறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளர் நிலையில் 16,500 ரூபாய் அலுவலக உதவியாளர் நிலையில் 15,700 ரூபாய் என்ற அடிப்படையில் கால முறை ஊதியம் வழங்க வேண்டும், அங்கன்வாடிக்கு கோடை விடுமுறை தற்காலிக பணி நீக்க காலத்தில் பிழைப்பூதியம் ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி தேசிய மருத்துவ காப்பீடு மகப்பேறு விடுப்பு 12 மாதம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

10 நாட்களாக தொடர் போராட்டம் மேற்கொண்டு வரும் நிலையிலும் அரசு தற்போது வரை செவி சாய்க்காததால் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றனர். கோவையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அவர்களின் சீருடைகளால் வாயை கட்டிக்கொண்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
பத்து நாட்களாக அரசு தங்களை கண்டுகொள்ளவில்லை என்றும் அவ்வப்போது வரும் அரசியல் கட்சியினர் தங்களை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் அரசியல் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். மேலும் கேட்காமலேயே மகளிர் உரிமைத் தொகை இன்று 5000 ரூபாய் வழங்கப்பட்டுள்ள நிலையில் பல நாட்களாக திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை கேட்டுப் போராடி வரும் தங்களுக்கு எந்த ஒரு பதிலும் தற்பொழுது வரை கிடைக்க பெறவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளனர்.






