• Sun. May 12th, 2024

வேடச்சந்தூர் அருகே வங்கியில் இரவில் ஒலித்த அலாரம்..!

Byவிஷா

Oct 13, 2023

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் வங்கியில் இரவில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் வேடசந்தூர் பைபாஸ் சாலையில் தனியார் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு 10 மணி அளவில், திடீரென்று வங்கியில் இருந்த அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலிக்க தொடங்கியது. இதுகுறித்து வங்கியின் இரவு காவலர் மேலாளருக்கு தகவல் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பதறியடித்துக்கொண்டு வந்த வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் வங்கியின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அதில் இயந்திர கோளாறு காரணமாக அலாரம் தானாக ஒலித்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து வங்கி ஊழியர்கள் அலாரத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்களால் அலாரத்தை நிறுத்த முடியவில்லை. இதனால் வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வடமதுரை போலீசார் விரைந்து வந்தனர். அதன்பின்னர் வங்கி ஊழியர்கள் மேல் இடத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின்னர் அலார ஒலி நிறுத்தப்பட்டது. இதனால் வங்கி ஊழியர்களும் போலீசாரும் நிம்மதி அடைந்தனர். அதன்பின்னர் வங்கி ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றனர். இரவு நேரத்தில் பெரும் சத்தத்துடன் வங்கியில் இருந்து அலாரம் ஒலித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *