திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க, சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே, கன்னியாகுமரி பகுதியானது திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதிகளாக இருந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியது. அந்தக் காலக்கட்டத்தில், அரண்மனையில் உள்ள நவராத்திரி மண்டபத்தில் விழா கோலாகலமாக நடந்து வந்தது. பத்மநாபபுரம் அரண்மனை தலைமை நிர்வாகம் திருவனந்தபுரம் அரண்மனைக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து இந்த நவராத்திரி விழாவும் தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. நிர்வாக தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவிற்காக. சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை குமாரசுவாமி, அரண்மனை தேவாரக் கட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் திருவனந்தபுரம் சென்று நவராத்திரி விழாக்கள் நிறைவடைந்ததும் மீண்டும் சுசீந்திரம் திரும்புவதும், இரண்டு மாநில காவலர்கள் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதும் அன்று தொடங்கிய இந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.
சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் செல்லும் இந்த நிகழ்விற்காக நேற்று (அக்டோபர் 11) கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தமிழக, கேரளம் மாநிலத்தின் காவல்துறையினரது அணிவகுப்பு மரியாதையுடன், முன்னுதித்த நங்கை அம்மானின் வாகனம் சுசீந்திரத்தில் உள்ள நான்கு ரத வீதிகளில் வலம் வந்து புறப்பட்ட இந்த நிகழ்வில், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், ஆர்.டி.ஓ.,சேதுராமலிங்கம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், தேவசம்போர்டு இணை ஆணையர் ரத்தின வேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் ஜோதிஷ்குமார், துளசிதரன்,சுந்தரி, ராஜேஷ், தி மு க., ஒன்றிய செயலாளர் பாபு உட்பட ஏராளமான பக்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.