விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் இரண்டு சிறுமிகள் அரைமணி நேரம் முட்டையில் அமர்ந்து யோகா செய்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.
விருதுநகர் அருகே உள்ள சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த சின்ன வைரவன் மற்றும் ரோகிணி தம்பதியரின் மகள்கள் வைரலட்சுமி மற்றும் சுகானா. சகோதரிகளான இவர்கள் சிறுவயதிலேயே யோகா கலையில் ஆர்வம் ஏற்படவே இருவரும் முறையாக யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில் யோகாவில் சாதனை படைக்கும் நோக்கில் இருவரும் முட்டை மீது அமர்ந்து தொடர்ந்து அரை மணி நேரம் யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளனர்.
இதற்காக சாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமி சுகானா 120 முட்டைகள் மேல் அமர்ந்து தொடர்ந்து 30நிமிடம் யோகாசனம் செய்தும், சிறுமி வைரலட்சுமி 30 முட்டைகள் மேல் அமர்ந்து இரு கைகளாலும் தண்ணீர் டம்ளர்களை பிடித்தவாறு தொடர்ந்து 30நிமிடம் யோகாசனம் செய்தனர். உலக சாதனை படைத்த இருவரும் நோபல் புக் ஆஃப் ரிக்காட்ஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர். இந்நிகழ்வுக்கு நோபல் புக் ஆஃப் ரிக்காட்ஸ் அமைப்பின் சிஇஓ அரவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறுமிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்களை வழங்கி பாராட்டினார்.