நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை பரபரப்பாக தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசின் ஆட்சியில் மூன்றாவது முறையாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை மறுநாள் (பிப்ரவரி 1) 2025-26 மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.
முதல் கட்டமாக, நாளை (ஜனவரி 31) முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 2வது வாரம் முதல், ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8வது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அவையை சுமூகமாக நடத்த இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அறிவிப்புகள், எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.