

வருகிற மார்ச் 8ஆம் தேதியன்று மகாசிவராத்திரியை முன்னிட்டு, அன்று இரவு முழுவதும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாசிவராத்திரி ஆண்டுதோறும் மாசி மாசத்தில் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தி திதியில் இரவில் இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். லட்சக்கணக்கான பக்தர்களும், சிவனடியார்களும் சிவராத்திரி அன்று விரதம் இருந்து இரவு முழுவதும் கண்களுக்கு சிவ சிந்தனையுடன் வழிபாடு செய்து சிவாலயங்களில் நடைபெறும் நான்கு யாம அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு தங்களது விரதத்தை நிவர்த்தி செய்வர். சிவராத்திரி அன்று சிவன் கோவிலில் அமர்ந்து அவரது பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் வருடத்திற்கான பல அனைத்தும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், உலகப்புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் மஹா சிவராத்திரி திருவிழா வருகிற மார்ச் 8ஆம் தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 9ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் அம்மன், சுவாமி மற்றும் உற்சவர் சன்னிதிகளில் விடிய, விடிய அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் எனவும், பக்தர்கள் அபிஷேக ஆராதனைகளுக்காக பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேகப் பொருள்களை மார்ச் 8-ஆம் தேதி மாலைக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

