• Mon. Mar 2nd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சேலத்தில் அ.தி.மு.க பெண் கவுன்சிலர்கள் கடத்தலால் பரபரப்பு..!

Byவிஷா

Jan 21, 2022

கத்திமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக ஊராட்சி ஒன்றிய பெண் உறுப்பினர்கள் இருவர் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் பங்கேற்று திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 13 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 பேர் திமுக, 6 பேர் அதிமுக, ஒருவர் பாமகவை சேர்ந்தவர்கள் ஆவர். அதிமுகவைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் ஒன்றிய குழுத் தலைவராக உள்ள நிலையில், ஒன்றியக் குழுத் தலைவர் ஜெகநாதன் மீது இன்றையதினம் நடைபெற்ற ஒன்றியக்குழு கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தநிலையில், நேற்றைய தினம் ஒன்றியக் குழு உறுப்பினர்களான 2 பெண் கவுன்சிலர்கள் சங்கீதா மற்றும் பூங்கொடி ஆகியோர் திமுகவினரால் கத்திமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து பனமரத்துப்பட்டி ஒன்றிய குழு தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பெயரில் தேர்தலை நடத்தக் கூடாது என வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ முத்து, நல்லதம்பி, ஜெயசங்கரன், சுந்தரராஜன் ஆகியோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

அதிமுக பெண் கவுன்சிலர்களை கத்தியை காட்டி மிரட்டி கடத்திச் சென்ற திமுகவினரை கண்டித்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சட்டமன்ற உறுப்பினர் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே, திமுகவினரால் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு அதிமுக பெண் கவுன்சிலர்கள் பனமரத்துப்பட்டி ஒன்றியக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு திமுக உறுப்பினருக்கு ஆதரவாக வாக்களித்தனர். அப்போது, பனமரத்துப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் அதிகளவில் திமுக, அதிமுக கட்சித் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக வார்டு உறுப்பினர்களான பெண்கள் கூறும்போது, தங்களை யாரும் கடத்தவில்லை தாமாக விருப்பப்பட்டு தான் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெரிவித்தனர். ஆனால், அவர்களை அச்சுறுத்தி பேச வைத்துள்ளார்கள் என்று அதிமுகவினர் குற்றசாட்டுகளை வைத்துள்ளனர். இது தொடர்பான புகாரில் வழக்கு பதிவு செய்துள்ள குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.