2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என நாமக்கல் மாவட்ட சுற்றுபயணத்தின் போது பேச்சு.
கொங்கு மண்டலத்தில் புரட்சிப் பயணம் மேற்கொண்டு வரும் வி.கே.சசிகலா, சேலம் மாவட்டத்தை தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பிரச்சார வேனில் அமர்ந்தபடியே அவர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது; “வரலாறு உள்ள வரை எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்களை யாரும் மறக்க முடியாது. 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் எனது தலைமையில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.கழகத் தொண்டர்கள் ஒத்துழைப்புடன் நிச்சயமாக அதிமுகவை மீட்பேன். அதிமுகவில் இருந்து எல்லோரையும் சேர்த்துக் கொள்வதோடு அதிமுகவில் உள்ள ஒவ்வொரு தொண்டர்களும் எனக்கு முக்கியம்.அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டது தான் திமுக அரசின் சாதனை. தேர்தல் அறிக்கையில் சொன்ன எதையும் திமுக நிறைவேற்றவில்லை.
மின் கட்டண உயர்வு ஏழை எளிய மக்களை பாதிக்கக்கூடிய ஒன்று. 63 சதவீதம் பேர் 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த கூடியவர்களாக உள்ளதால் பொதுமக்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுகின்றனர். மின் கட்டண உயர்வால் சிறு குறு தொழில் நிறுவனங்களை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.