சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கேரள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்புடன் இரு மாநில அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடைபெற்றது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும் எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக எல்லைப் பகுதிகளை ஒட்டியுள்ள கேரள மாநிலத்தின் பாலக்காடு, எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேர்தல் நேரத்தில் எல்லை வழியாக நடைபெறும் சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, கோவை – கேரள எல்லைகளில் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டது. தேர்தல் அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், மதுபானம், பணம் மற்றும் கள்ள நோட்டுகள் கடத்தப்படுவதைத் தடுக்க இரு மாநில அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் எல்லைப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி, பாதுகாப்புப் பணிகளைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம், தேர்தல் சமயத்தில் அண்டை மாநிலங்களுக்கிடையேயான பாதுகாப்புப் பணிகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.






