நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள புதிய கட்சியில், தமிழக மக்களின் நலன் குறிதது புதிய பாதையை வகுத்துக் கொடுத்தால், அவருடன் இணைந்து பணியாற்றத் தயார் என ஒ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் அதிரடியாக அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். அதனை தொடர்ந்து அண்மையில், தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜய் இருக்கும் போதே, அவரின் அரசியல் வருகை பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. இப்படியான சூழலில், நேற்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன், தேனி தொகுதி எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜயின் அரசியல் வருகையை வரவேற்று பேசினார்.
அவர் பேசுகையில், நடிகர் விஜய் முன்னர் இருந்தே தனது ரசிகர் மன்றங்கள் மூலம் பல்வறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். இதனை தொடர்ந்து அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக கட்சி தொடங்கியுள்ளார். இது அரசியல் ஆசை இல்லை. இது அவரது லட்சியமாக கூட இருக்கலாம். தமிழக மக்கள் நலன் குறித்து நல்ல பாதையை வகுத்து கொடுத்தால் அவரோடு இணைந்து பணியாற்றவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என அதிரடியாக கூறினார். தேனி எம்பி ரவீந்திரநாத்.
அவர் மேலும் பேசுகையில், ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் ஓபிஎஸ் ஜெயிப்பார். தேனி தொகுதியில் டிடிவி.தினகரன் ஜெயிப்பார். ஓபிஎஸ் வெற்றிக்கு பின்னர் போடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவேன் எனவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.