• Sat. Apr 27th, 2024

குடிமராமத்து பணிகள் முறைகேடு நடைபெற்றிருந்தால் நடவடிக்கை – அமைச்சர் மூர்த்தி..!

Byகுமார்

Nov 8, 2021

குடிமராமத்து பணிகளில் முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தால் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி.


மதுரை மாவட்டம் நாராயணபுரம் அருகிலுள்ள புளியங்குளம் சின்ன கண்மாய் பகுதியை வணிகவரி, பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் மாவட்டம் முழுவதும் உள்ள ஏரி, கண்மாய், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நீர் செல்ல இயலாமல் உள்ள கண்மாய்களின் வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கப்படுகின்றன. இந்த பணியில் மாவட்ட ஆட்சியர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.


குடிமராமத்து பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதா என்பது குறித்து அந்த துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முறைகேடு நடைபெற்றதாக உறுதி செய்யும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில் முறையாக ஏரி குளம் கண்மாய்கள் பராமரிக்கப்படவில்லை. தற்போது குற்றம் சாட்டுகின்றனர். கடந்த காலங்களில் அதிமுக அரசு என்ன செய்தார்கள்?


மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கியமான ஏரி, குளங்கள், கண்மாய்கள் நிரம்பி உள்ளன, பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நீர் நிரப்பும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர் என்றார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *