மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் 1902 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் பழமை மாறாது சிறு விரிசல் கூட ஏற்படாத கட்டிடமாக இந்த கட்டடம் உள்ளது.

நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கட்டிடத்தில் தற்போது சார் ஆட்சியராக பணியாற்றும் உத்கர்ஷ்குமார், முகப்பு பகுதியிலேயே தொன்மையான இக்கட்டிடத்தை இடித்து உணவு அருந்தும் அறை, கழிப்பறை கட்டிடங்கள் கட்டி வருவதாகவும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் தன்னிச்சையாக தேர்தல் நடத்தும் அலுவலரே அவரது அலுவலகத்தில் கட்டிடப்பணிகளை மேற்கொண்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பழமையான இந்த கட்டித்தில் மாற்றங்களை கொண்டு வர தொல்லியல் துறையினரிடமோ, பொதுப்பணித்துறையினரிடமோ எந்த அனுமதியும் பெறாது தொல்லியல் வரலாற்றை அழிக்கும் நோக்கில் நடந்து வரும் இப்பணிகளை உடனடியாக நிறுத்துவதோடு, தொன்மையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



