விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் 3 மாதத்திற்கு ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது ஜவுளி கடைக்கு வரும் காஞ்சிரங்குளத்தை சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் பாலமுருகன் என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பாலமுருகன் சிறுமியை காதலிப்பதாக கூறி தனியாக பேசலாம் என அழைத்து யாரும் இல்லாத இடத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அத்துடன் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதை கண்டு அவரின் பெற்றோர் சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, ஆட்டோ ஓட்டுநர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஆட்டோ ஓட்டுநர் பாலமுருகனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.