பழனியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்து கோவை ஒத்தக்கால் மண்டபம் அருகே தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனியில் இருந்து பொள்ளாச்சி வழியாக கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. பேருந்தை சுரேஷ் என்பவர் ஓட்டி வந்த நிலையில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்தனர். இந்த நிலையில் பேருந்து மயிலேறிபாளையம் பிரிவை கடந்து வந்த போது என்ஜினில் இருந்து புகை வருவதை கண்ட நடத்துனர் கதிரேஷ், உடனடியாக ஓட்டுனரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து ஒத்தக்கால் மண்டபம் அடுத்த பிரீமியர் நகர் பகுதியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார். அப்போது மளமளவென பரவிய தீ கொழுந்து விட்டு எரியவே உடனடியாக அங்கிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பேருந்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இருப்பினும் பேருந்து முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.