சென்னையில் இருந்து துர்காப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று மாலை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. விமானத்தில் 158 பயணிகள்,6 விமான ஊழியர்கள், 164 பேர் ஏறி அமர்ந்து விட்டனர். விமானத்தின் கதவுகள் மூடப்பட்டு, விமானம் ஓடுபாதையில் ஓட தயாரானது.

அப்போது விமானத்தின் அவசர கால கதவு திறக்கப்படுவதற்கான, எச்சரிக்கை மணி, விமான கேப்டன் கேபினுக்குள் ஒலித்தது. இதை அடுத்து பரபரப்படைந்த விமானி, உடனே விமான பணிப்பெண்கள் மூலம், அவசர கால கதவை, திறக்க முயற்சித்தது யார் என்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது விமானத்தில் அவசரகால கதவு அருகே, இருக்கையில் அமர்ந்திருந்த, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்த சர்க்கார் (27) என்ற பயணி தான், அவசரகால கதவை திறக்க முயற்சித்தார் என்று தெரியவந்தது.
இதை அடுத்து, விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, பயணி சர்க்கார் இடம், விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பயணி சர்க்கார், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர் என்று தெரிய வந்தது. அதோடு தற்போது, சொந்த வேலையாக துர்காபூர் செல்வதாகவும் கூறினார்.
மேலும் பயணி சர்க்கார், தான் வேண்டுமென்று, அவசரகால கதவை திறக்க முயற்சிக்கவில்லை என்றும், ஏதோ கவனத்தில் தெரியாமல், அவசரகால கதவு திறப்பதற்கான பட்டனை அழுத்தி விட்டதாகவும். ஆனால் கதவு திறக்கப்படவில்லை, அதற்கு முன்னதாக தான் பட்டனிலிருந்து கையை எடுத்து விட்டதாகவும் கூறினார். ஆனாலும் விமானியும், பாதுகாப்பு அதிகாரிகளும், பயணி சர்க்காரின் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
அதோடு பாதுகாப்பு அதிகாரிகள் பயணி சர்க்காரின், துர்காப்பூர் விமான பயணத்தை ரத்து செய்தனர். மேலும் பயணி விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டார். அதோடு விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்த பயணியின் உடைமைகளும், கீழே இறக்கப்பட்டன.
அதன்பின்பு இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள், பயணி சர்க்காரை, அழைத்துச் சென்று, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். சென்னை விமான நிலைய போலீசார், இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து, பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 157 பயணிகளுடன், சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக, சென்னையில் இருந்து துர்காபூர் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.