பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் காரை மலையப்ப நகர் திமுக கிளைச் செயலாளராக உள்ளவர் சிவகுமார். இவர் பாலக்கரை பகுதியில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைத்திருக்கிறார். பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலின் போட்டோவுடன் பேனர் வைத்துள்ளார். அந்தப் பேனரில், நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர், தமிழக முதல்வர், மத்திய- மாநில அமைச்சர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என்று தெரிவித்திருக்கிறார்.
திமுக பிரமுகர் ஒருவர் பிரதமர் மோடிக்கு பேனர் வைத்ததால் பெரம்பலூர் திமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதனால் பேனர் வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அகற்றப்பட்டு இருக்கிறது. திமுக மாவட்ட அலுவலகத்தில் இருந்து கிளைச் செயலாளர் சிவகுமாரை அழைத்து கண்டித்த பின்னரே அவர் அந்தப் பேனரை அகற்றியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.