ஏரி, கம்மாய், குளம், போன்ற நீர் நிலைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கான சங்க தேர்தலில் 104 வயது மூதாட்டி ஆர்வமாய் வாக்களிக்க வந்தார். போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் அவரை சுமந்து வந்து வாக்களிக்க வைத்தார்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏரி, கம்மாய், குளம், போன்ற நீர் நிலைகளை பயன்படுத்தும் நீர்பாசன விவசாயிகளுக்கான சங்கத் தேர்தல் நடந்தது. மாவட்டம் முழுவதிலும் உள்ள 13 ஒன்றியங்களில் மொத்தம் 72 இடங்களில் நடைபெற்றது.
இதில் திருவரங்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 9 இடங்களில் ஆலங்குடியை அடுத்த கல்லாலங்குடி பெரியகுளம் நீர்பாசன விவசாயிகளுக்கு கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த வாக்குபதிவில் துரைச்சாமி என்பவரின் மனைவியான குண்டாமணி அம்மாள் என்ற 104 வயது மூதாட்டி வந்து வாக்களித்தது அப்பகுதியில் பேசுபொருளானது. நடக்கக்கூட முடியாமல் இருந்த அவரை, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர் தனது கைகளில் தூக்கி வந்து வாக்களிக்க வைத்தார். இதுவரை நடைபெற்ற பொதுத்தேர்தல், இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் மூதாட்டி தவறவிடாமல் தொடர்ந்து வாக்களித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.