தமிழக முழுவதும் பெரியார்,அண்ணா சிலைக்களுக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெரியார், அண்ணா சிலைகளை சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. விழுப்புரம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் அண்ணா சிலை அவமதிக்கப்பட்டு இருந்தது. இதுபோன்று மேலும் பல இடங்களிலும் அண்ணா மற்றும் பெரியார் சிலைகளை மர்ம கும்பல் அவமதித்து சேதப்படுத்த திட்டமிட்டிருப்பதாக உளவு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னை முழுவதும் உள்ள பெரியார்-அண்ணா சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை முழுவதும் 47 பெரியார் சிலைகளுக்கும், 17 அண்ணா சிலைகளுக்கும் உரிய பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிலைகள் இருக்கும் பகுதிகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள். இதேபோன்று அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.