கோவையில் நாளை நடக்க இருந்த பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுப்பு
கோவை பீளமேடு பகுதியில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை மிரட்டும் வகையில் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி உத்தமராமசாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். அவரது கைதை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். அவர்களும் கைது செய்யபபட்டு விடுவிக்கப்பட்டனர்.
பா.ஜ.க மாவட்ட தலைவர் மற்றும் கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை சிவானந்தா காலனியில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக பா.ஜ.கவினர் அறிவித்து இருந்தனர். இதற்காக போலீசிலும் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் கோவையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாகவும், பதட்டத்தை தணிக்கவும் பா.ஜ.க.வினரின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.