9 அடி உயர ஜெயலலிதா சிலை முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், அது பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது எனவும் அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.
இதுகுறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவை கவுரவிக்கும் வகையில், சென்னை காமராஜர் சாலையில் உள்ள, மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில், அவரின், 9 அடி உயர வெண்கல சிலை, இந்தாண்டு ஜனவரி 28ஆம் தேதி திறக்கப்பட்டது. மேலும் அந்த வளாகத்திற்கு, ‘அம்மா வளாகம்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது.
ஆனால் தற்போது ஜெயலலிதா அவர்களின் சிலை பறவைகளின் கூடாரமாக மாறிவிட்டது. முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, ஜெயலலிதா சிலையை பராமரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் சிலை பராமரிப்பை, அ.தி.மு.க.,விடம் ஒப்படைக்க வேண்டும்” என்று பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.