• Fri. Apr 17th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

26 பேய்கள் இணைந்து நடிக்கும் ‘மாயத்திரை’ படம்…

ஸ்ரீசங்கர நாராயணா சாமுண்டீஸ்வரி மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் V.சாய் கிருஷ்ணா தயாரித்துள்ள படம் ‘மாயத்திரை’.

இந்தப் படத்தில் கதாநாயகனாக அசோக்குமார் நடிக்க, சாந்தினி தமிழரசன், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் முக்கிய வேடங்களில் ‘காதல்’ சுகுமார், ‘காதல்’ சரவணன், பாவா லட்சுமணன், நடன இயக்குநர்கள் சுஜாதா, தருண், மாஸ்டர் ஆரவ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.எஸ்.என்.அருணகிரி மற்றும் எஸ்.எஸ்.தமன் ஆகியோர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளனர். T.சம்பத்குமார். இந்தப் படத்தை இயக்கியுள்ளார். அடிப்படையில் திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் விஸ்காம் பேராசிரியரும்கூட.

வரும் ஆகஸ்ட்–5ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் நிகழ்ச்சிநடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் T.சம்பத்குமார். பேசும்போது, 23 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில் பகுதியில் இருந்த ஒரு திரையரங்கில் தீ விபத்து ஏற்பட்டு 23 பேர் பலியான உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன்.அதேசமயம் இந்தப் படம் வழக்கமான ஹாரர் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதுவரை வந்த ஹாரர் படங்களில் பேய்தான் பழி வாங்கும். ஆனால், இந்தப் படத்தில் பேய் பழி வாங்காது. மன்னிப்பு வழங்கும். மன்னிப்பு என்பது மனித குலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. பேய்களிடமும் அது இருக்குன்னு இந்தப் படத்துல சொல்லியிருக்கோம்.

இது பேய்களின் முக்கோண காதல் கதை என்றுகூட சொல்லலாம். ஒரு பேயின் தியாகத்தைத்தான் இந்தப் படத்தில் சொல்லி இருக்கிறோம். இதில் ஒன்றல்ல, இரண்டல்ல… 26 பேய்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன.இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள அசோக்குமார் ‘ஜீவா’ என்கிற கதாபாத்திரத்தில் சவுண்ட் இன்ஜினியராக நகரத்து இளைஞர், கிராமத்து பள்ளி மாணவர் என்று இரண்டுவிதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.

இந்த இரண்டு கேரக்டர்களிலுமே தோற்றத்திலும், நடிப்பிலும் வித்தியாசம் காட்டியுள்ளார் அசோக். அதற்காகவே தன் உடலை இளைக்க வைத்து, இளமையான தோற்றத்தில் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார். சினிமாவில் இதுவரை திரைத்துறை சம்பந்தமான கதாபாத்திரங்கள் பல இடம் பெற்றிருந்தாலும் சவுண்ட் இன்ஜினியர் கதாப்பாத்திரம் இப்போதுதான் முதன்முறையாக இந்த படத்தில் இடம் பெறுகிறது.

வழக்கமாக இரண்டு கதாநாயகிகள் இருந்தால் ஏற்படும் பிரச்சனைகள் எதுவும் எனக்கு இந்தப் படத்தில் ஏற்படவில்லை. அல்ட்ரா மாடல் பெண்ணாக நடித்துள்ள சாந்தினி இடைவேளைக்கு முன் விதவிதமான மாடர்ன் உடைகள் அணிந்து வந்தாலும் இடைவேளைக்குப் பின் ஒரே ஒரு ஆடை மட்டுமே அணிந்து நடித்துள்ளார்.நாயகி ஷீலா ராஜ்குமார், கோமதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர் நடித்துள்ள ‘கல்கோனா’ என்கிற பாடலை பார்த்துவிட்டு இந்தப் படத்தின் தூத்துக்குடி திருநெல்வேலி ஏரியா விற்பனை ஆகியுள்ளது என்றால் அது, இந்தப் பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள ‘அட்ரா மச்சான்’ என்கிற பாடலுக்கு ரிசா ஆடியுள்ளார். ராதிகா மாஸ்டர் ‘கல்கோனா’ பாடலில் புதுமுகங்களுக்கும் பயிற்சி கொடுத்து ஆட வைத்துள்ளார். சண்டை பயிற்சியாளர் பிரபு தினேஷ், 3 சண்டை காட்சிகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். திருநெல்வேலி, தென்காசி, புளியங்குடி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது…” என்றார்.”