தற்கொலை செய்துகொண்ட சுகாதார பெண் பணியாளரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர்கள் வாகனத்தின் சக்கரம் முன்பு படுத்து புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர் நதியா என்பரை பணியில் இருந்து நீக்கியதால், மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலைக்கு காரணமான குத்தாலம் திமுக நகர செயலாளர் சம்பு மீது மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்வோம் என உறுதி அளித்தும் போராட்டம் தொடர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் நதியாவின் உடலை உறவினர்களிடம் கூறாமல் உடற்கூறு ஆய்வு செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதை அறிந்த உறவினர்கள் பிணவறைக்கு நேரில் சென்று காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் உடலை எடுத்துச் செல்லும் வாகனம் முன்பு படுத்துப் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் திமுக நிர்வாகிக்கு சாதகமாக செயல்படுவதாக உறவினர்கள், அவர்களை கைது செய்யும் வரை நதியாவின் உடலை பெற மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.