• Mon. May 4th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

மைத்துனர் மகள்களுக்கு பாலியல் தொல்லை.. வக்கிர புத்தி விஏஓ போக்சோவில் கைது!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுக்கா குமாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் தங்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, அவரது மைத்துனரின் 19, 17 வயது மகள்கள் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு தாலுகா குமாரமங்கலம் பகுதியின் கிராம நிர்வாக அலுவலராக இருப்பவர் ஜீவானந்தம். கொல்லப்பட்டி வீட்டுவசதி வாரியத்தில் வசித்து வருகிறார். இவரது மனைவியின் அண்ணன் செந்தில்குமார், அவரது மனைவி சாந்தி ஆகியோர் கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில் ஜீவானந்தம் வீட்டுக்கு எதிரில் தான் கணவனை பிரிந்த சாந்தி தனியாக மகள்களுடன் வசித்து வருகிறார். இவர்களது 19 மற்றும் 17 வயதுள்ள மகள்களை செந்தில்குமாரின் மைத்துனரான கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் மற்றும் பெண்களின் தாத்தா, பாட்டி தான் படிக்க வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் ஜீவானந்தம் கடந்த சில மாதங்களாக தங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதனை தடுத்ததற்கு தங்களை கொன்று விடுவேன் என மிரட்டியதாகவும் இரண்டு பெண்களும் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஆனால் மகளிர் காவல் நிலையத்தில் புகாரைப் பெற்றுக் கொள்ள மறுத்ததோடு புகார் கொடுக்க வந்தவர்களை மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.

ஜீவானந்தம் கிராம நிர்வாக அலுவலர் என்பதால் போலீசார், ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும்,

காவல் நிலைய ஆய்வாளர் ஹேமாவதி மற்றும் போலீசார் தங்களைத் தொடர்ந்து மிரட்டுவதாகவும், பெண் பிள்ளைகளிடம் ஆபாசமாக கேள்விகள் கேட்பதாகவும் குற்றச்சாட்டினர். பல கட்ட போராட்டத்திற்கு பிறகு, காவலர்கள் கிராம நிர்வாக அலுவலரை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் .