• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கலைக்காக உயிரை விட்ட கலைஞர்…

மதுரையில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின் உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில் நிகழ்ச்சியை காணவந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மதுரை வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பரதம், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதேபோல் பரத கலைஞர் காளிதாஸின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
பரதநாட்டிய கலைஞர் காளிதாஸ் நிகழ்ச்சியில் ‘எல்லாம் வல்ல தாயே’ என்ற பாடலுக்கு, தனது மாணவர்கள் மற்றும் மகளுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். பாடல் முடியும் வரை விடாமல் நடனம் ஆடிய காளிதாஸ், திடீரென நெஞ்சை பிடித்த படி நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். பின்னர் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே காளிதாஸின் உயிர் பிரிந்தது. இதனை கண்ட சக கலைஞர்கள், அங்கிருந்த பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பரதநாட்டியக் கலைஞர் காளிதாஸுக்கு 54 வயதாகிறது. இளம் வயதிலிருந்தே பரதநாட்டியம் மீது அதிக ஆர்வம்கொண்ட காளிதாஸ், பரத நாட்டியாலய பள்ளி ஒன்று நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். மகன் மிருதங்க வித்துவான், மகள் பரத கலைஞர், மனைவி கர்நாடக சங்கீத ஆசிரியை ஆவர்.
கோவில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது பிரபல கலைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.