காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா, பிரதாப் சிங் பாஜ்வா, சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் நரேஷ் குஜ்ரால் உள்பட 13 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவி காலம் ஏப்ரலில் முடிவடைய உள்ளது.
பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுராவில் தலா ஒன்று என இந்த பதவிகள் காலியாக உள்ளன. இவற்றிற்கு வரும் 31-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
வேட்பு மனு பரிசீலனை 22-ம் தேதியும், வேட்புமனுவை திரும்பப் பெற மார்ச் 24-ம் தேதி கடைசி நாளாகும். மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 31-ம் தேதி நடத்தப்பட்டு அன்றைய தினம் மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கை எம்.பி வேட்பாளராக அறிவித்துள்ளது. மேலும், ஐஐடி பேராசிரியர், சந்தீப் பதக், டெல்லி சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சதா, அசோக் மிட்டல், தொழிலதிபர் சஞ்சீவ் அரோரா ஆகியோரையும் ஆம் ஆத்மி கட்சி மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.