உலக அளவில் மிகவும் பிரபலமான பீச் மல்யுத்த போட்டி முதல்முறையாக இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் தேசிய அளவிலான பீச் மல்யுத்த சங்கத்தின் அனுமதியுடன் தேசிய அளவிலான பீச் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியை சென்னையில் முதன்முறையாக இந்திய மல்யுத்த சங்கம் அறிமுகப்படுத்தியது.
இந்திய மல்யுத்த சங்க தலைவரும், மக்களவை உறுப்பினருமான புஷன் சரண் சிங் இப்போட்டியை தொடங்கி வைக்கிறார். அத்துடன் டோக்கியா ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் மற்றும் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்கின்றனர். இந்தியாவில் முதல்முறையாக பீச் மல்யுத்த போட்டி இம்மாதம் 28ந் தேதி முதல் 30 தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில், இப்போட்டிக்கான பத்திரிகையாளர் சந்திப்பு நாளை மாலை 3.30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் 1980ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி பாஸ்கரன், தமிழகத்தின் முதல் குத்துச்சண்டை ஒலிம்பியன் தேவராஜ், ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கபடி வீராங்கனை ஹர்பீர் கெளர், இந்திய பீச் மல்யுத்த சங்க தலைவர் ரோஷர்த் சிங் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து போட்டியின் முக்கியத்துவம் குறித்து விளக்கவுள்ளனர். அத்துடன் ஒலிம்பிக்கில் மல்யுத்தம் போட்டி தொடர்பாகவும், தமிழ்நாட்டில் பீச் மல்யுத்த போட்டியின் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைக்கின்றனர்.