தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் திமுக அதிமுக மற்றும் பல்வேறு கட்சியினர் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல் மக்களை கவரும் வகையில் பல்வேறு டிஜிட்டல் பேனர்கள் தங்களது கட்சியின் தலைவர்கள் படங்களுடன் ஒவ்வொரு வீதியிலும் வைத்துள்ளனர்.
இந்நிலையில் மாநகராட்சி 32வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்அதிமுக வேட்பாளர்வினோத்குமார் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியில் 32வது வார்டு பொதுமக்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் படத்துடன் டிஜிட்டல் பேனர் அதிமுக கட்சி தேர்தல் அலுவலகத்தில் வைத்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை தேர்தல் பரப்புரைக்காக கட்சி அலுவலகத்திற்கு வந்த அதிமுகவினர் மற்றும் வேட்பாளர் வினோத் ஆகியோர் பேனர் தாறுமாறாக கிடந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்து இருந்தனர்.
அதிமுக தேர்தல் கட்சி அலுவலகத்திற்கு எதிரே திமுகவின் கட்சி தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டிருந்தது. இதனால் அதே வார்டில் இருக்கக்கூடிய திமுகவினர் கிழித்திருக்கலாம் என்று மாநகராட்சி பகுதியில் உள்ள அதிமுக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இப்பகுதிக்கு வரத்தொடங்கி பேசிக் கொண்டிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர் வடக்கு காவல்துறையினர் வேட்பாளர் மற்றும் கட்சியின் பொறுப்பாளர் இடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உடனடியாக அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு போலீசார் ஆய்வு செய்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் 5-திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் டிஜிட்டல் பிளக்ஸ் பேனரை தாவி தாவி கடித்து இழுத்து கிழித்து விடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து உடனடியாக அதிமுகவினர் இடம் தகவல் தெரிவிக்கப்பட்டு பெரும் பரபரப்பான சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வந்தனர்.