வீட்டுக்கு ஒரு மரம் வைப்போம் வீதி எங்கும் மரம் வளர்ப்போம் என மரம் வளர்ப்பு குறித்து அரசாங்கமும் சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்களும் முனைப்போடு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து மக்கள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த ஈடுபாட்டை அதிகரித்து வரும் சூழலில். தன்னுடைய சுயநலத்திற்காக ஊர் மக்களின் பொதுச் சொத்தாக இருந்த சாலையோர மரங்களை வெட்டிச் சாய்த்த கொடூர செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி சார்பில் பூலா காட்டூர் உள்ளிட்ட கிராம சாலையோரம் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் பூலா காட்டூரில் உணவகம் நடத்தி வரும் மூர்த்தி என்பவரது பஞ்சாபி தாபா அருகே சாலையோரம் நடப்பட்ட மரங்கள் வளர்ந்து வந்த நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து மது குடிக்கும் மது பிரியர்கள் மூர்த்தி உணவகத்திற்கு சென்று மது அருந்தி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சாலையோரம் மரங்களுக்கு அருகில் அமர்ந்து மது குடித்து வந்தனர். இதனால் கோபம் கொண்ட உணவக உரிமையாளர் மூர்த்தி இன்று காலை சாலையோரம் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்ட 30க்கும் மேற்பட்ட மரங்களை அடியோடு வெட்டி சாய்த்தார். இதைக்கண்டு கொந்தளித்த அப்பகுதி கிராம மக்கள் . ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனடியாக உணவக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோபத்தில் கொந்தளித்து வருகின்றனர். மேலும் குமாரபாளையம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உணவக உரிமையாளிரின் இக்கொடூர செயலை கண்டித்து சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் பலரும் தங்களது கண்டிப்பை தெரிவித்து வருகின்றனர்