மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 7வது வார்டு முதலியார் கோட்டை நடுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது.

பள்ளம் தோண்டி ஒரு மாதத்திற்கு மேலான நிலையில் பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுச் சென்றதால் அந்தப் பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் பணிகளையும் முறையாக செய்யவில்லை என கூறுகின்றனர். முதலியார் கோட்டை நடுத்தெரு பகுதியில் கழிவுநீர் தேங்கி சுகாதார கேடு ஏற்படுவதாக இந்தப் பகுதி பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கழிவு நீரை வெளியேற்றும் நடவடிக்கையாக முதலியார் கோட்டை நடுத்தெரு பகுதியில் ரேஷன் கடை அருகில் பள்ளம் தோண்டி உள்ளனர். ஆனால் கழிவுநீர் கால்வாய் பணியை முடிக்காத நிலையில் பள்ளத்தை அப்படியே விட்டு விட்டு சென்று விட்டதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால் ஒரு மாதத்திற்கு மேலாக கழிவுநீர் பள்ளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்கள் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இருசக்கர வாகனம் செல்ல முடியாத நிலையில் உள்ளது பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுகிறது.

பொதுமக்கள் சிரமத்தை குறைக்கும் வகையில் சோழவந்தான் பேரூராட்சி 7வது வார்டு முதலியார் கோட்டை நடுத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணிக்காக தோண்டிய பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். கழிவுநீர் வெளியேறி செல்ல
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



