மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி டி.குன்னத்தூர் அம்மா கோவில் வளாகத்தில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏக்கள், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

திருமங்கலம் தொகுதி கரடிக்கல் பகுதியில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை, குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு, விமான நிலையத்திற்கு இணையான பஸ் போக்குவரத்து திட்டம் என அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
சேலம், கோயம்புத்தூர், மதுரைக்கு அறிவிக்கப்பட்ட பாஸ்போர்ட் திட்டம் அரசியல் காரணங்களுக்காக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மீண்டும் அம்மாவின் ஆட்சி, எடப்பாடியார் தலைமையில் தொடரும்போது, திருமங்கலத்தில் இரட்டை இலை மலரும்போது அந்த பாஸ்போர்ட் திட்டம் திருமங்கலம் தொகுதி மக்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என உறுதி அளித்தார்.
நம்முடைய நகராட்சிக்கும், பேரூராட்சிக்கும், ஊராட்சி ஒன்றியத்திற்கும் அம்மா ஆட்சியில், எடப்பாடியார் முதல்வராக இருந்தபோது பெற்றுத்தந்த சிறப்பு நிதியை முறியடிக்க இன்னும் எவராலும் முடியாது.

கொரோனா காலத்தில் ஒரு லட்சத்து பத்தாயிரம் குடும்பங்களுக்கு காய்கறி தொகுப்பு, அரிசி பை, கோதுமை பை கொடுத்தோம். அன்றைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் கூட அரிசி வாங்க முடியாது. யாரும் வெளியே வரவில்லை. ஆனால் எங்களை நம்பி இரட்டை இலைக்கு வாக்களித்த மக்களின் உயிர்தான் எங்களுக்கு முக்கியம் என்றார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், அதிமுகவில் வெற்றி பெற்ற இரண்டு பேரின் ராஜினாமாவால் இன்று இடைத்தேர்தல். சுயலாபத்திற்காக பெற்று வளர்ந்த இயக்கத்தை விட்டுவிட்டு பிற கட்சியில் சேருவது பச்சை துரோகம். இந்த துரோகத்திற்கு மக்கள் ஒருபோதும் துணை போக மாட்டார்கள்.
பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் அதே தொகுதியில் வேறு கட்சி சார்பில் போட்டியிடுவது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது என நீதிமன்றமே கூறியுள்ளது.
39 சதவீத வாக்குகளை மட்டும் பெற்று ஆட்சிக்கு வந்தவர்கள், 65 சதவீத மக்கள் உங்களை புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். நாற்பதாயிரம் கோடி கடன், இன்னும் ஐந்து வருடத்தில் பத்து லட்சம் கோடியை தாண்டும். விவசாயிகள் காதில் பூ வைத்து போராடுகிறார்கள். மீனவர்கள் பட்டினப்பாக்கத்தில் போராடுகிறார்கள். 1200 கோடிக்கு தலைமை செயலகத்தை திறக்க போகிறார்கள் என கடுமையாக சாடினார்.

எத்தனை விஜய் வந்தாலும், ஓராயிரம் விஜய் வந்தாலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை யாராலும் அசைக்க முடியாது. வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும், செத்தாலும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்தான் என உணர்ச்சிப்பெருக்குடன் பேசினார்.



