உலக ஓசோன் தினத்தை அனுசரிக்கும் விதமாக அரசு உயர்நிலைப்பள்ளி மாந்தாங்குடியில் மாவட்ட வன அலுவலர் எஸ். கணேசலிங்கம் தலைமையில் 250 மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டு மாணவருடைய உலக ஓசோன் தின விழிப்புணர்வு உரையாற்றினார்.

அவர் பேசுகையில் மாணவர்கள் உங்களால் முடிந்த பங்களிப்பை நீங்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து இப் பூமிப்பந்தை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். முடிந்தவரை நெகிழிப்பை பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.
பயன்பாட்டில் இல்லாத போது முடிந்தவரை மின்விளக்குகள் மின் சாதனங்களை அனைத்து வைத்து மின்சாரத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்வில் மேலும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் கலந்து கொண்டு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் விதமாக மாணவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வை பெற்று அவர்தம் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், சமூகத்திற்கும் விழிப்புணர்வை உருவாக்கும் வகையில் மாணவர்கள் செயல்பட வேண்டும் என்று எடுத்துக் கூறி மாவட்ட வன அலுவலர் அவர்கள் தலைமையில் விழிப்புணர்வு உறுதி மொழியை வாசிக்க மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தோப்புக்கொல்லை வனச்சரகர் ஆ.ராஜேந்திரன் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர். சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. சரவணன் பள்ளிக்கு மரக்கன்றுகளை வழங்கிய வன அலுவலர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அனைவரும் மரக்கன்றுகளை பாதுகாப்பாக வளர்த்து பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றிக் காட்டுவோம் என தகவல் அளித்து வரவேற்புரை ஆற்றினார்.

பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஆசிரியர் சண்முகம் நன்றி உரையாற்றினார். வனத்துறையைச் சார்ந்த கார்த்திக் சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.








