மதுரை மாவட்டம் சோழவந்தான் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பத்துக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் இருந்து இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கல்வி பயின்று வருவதாக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து புகார்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 1500 மாணவிகள் படிக்கும் இந்த பள்ளியில் மாணவிகளுக்கான கழிப்பறை இல்லாமல் சிரமப்படுவதாக கூறுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு மாணவிகளுக்கான கழிப்பறை பத்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத நிலையில் இரண்டு கழிப்பறை மட்டுமே உள்ளதால் காலையில் பள்ளிக்கு வரும் மாணவிகள் மாலை வீட்டிற்கு செல்லும் வரை அவசர பயன்பாட்டிற்கு கழிப்பறை செல்ல முடியாத நிலை உள்ளதாக கூறுகின்றனர்.

கட்டி முடித்த கழிப்பறைகளை திறக்க அதிகாரிகளோ மக்கள் பிரதிநிதிகளோ எந்த ஒரு அக்கறையும் காட்டவில்லை என பெற்றோர் தரப்பிலிருந்து புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் 1500க்கு மேற்பட்ட மாணவிகளின் உடல்நலத்தை கருத்தில் கொண்டு சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிப்பறை கட்டிடங்களை உடனடியாக திறப்பதற்கு அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.








