சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம், சானிடோரியம், பெருங்களத்தூர், முடிச்சூர், செம்பாக்கம், மாடம்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. மாலை நேரத்தில் திடீரென பெய்த மழையால் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பிய பொதுமக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

மேலும், சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மழை பெய்த நேரம் போக்குவரத்து உச்ச நேரமாக இருந்ததால் தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலை, வேளச்சேரி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. இதன் காரணமாக பல இடங்களில் சிறிய அளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் பயணம் செய்தனர். பாதசாரிகளும் குடை மற்றும் மழைக்கோட்டுகளுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டிய சூழல் உருவானது. சாலைகள் வழுக்கலாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனத்துடன் பயணிக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அபாயம் இருப்பதால் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருவதால், அடுத்த சில மணி நேரங்களிலும் வானிலையில் மாற்றம் நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.




