தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு சாமிகுளம் தெருவில் நேற்று நள்ளிரவு மது பிரியர்கள் சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மது போதையில் தெருவில் பாட்டில்களை உடைத்தும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. நள்ளிரவு நேரத்தில் அரங்கேறிய இந்த சம்பவத்தால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அப்பகுதி மக்கள் கடும் அச்சத்திலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளனர்.
குடியிருப்பு பகுதிக்குள்ளேயே இதுபோன்ற அராஜகங்கள் அரங்கேறுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டு, இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

சாமிகுளம் தெருவில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து, சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன், அச்சுறுத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் உருக்கமான கோரிக்கையாக உள்ளது.




