கோவை – திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்து ஒன்று அசுர வேகத்தில் இயக்கப்பட்டதோடு, அதிகச் சத்த எழுப்பும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரனை (Air Horn) அலறவிட்டுச் சென்ற திடுக்கிடும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அசுர வேகம் & ஏர் ஹாரன் அட்ராசிட்டி:

கோவை மற்றும் திருப்பூர் இடையே தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பின்னலாடை நிறுவன ஊழியர்கள் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், கோவையில் இருந்து திருப்பூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்றின் ஓட்டுநர், சாலையில் சக வாகன ஓட்டிகளையும் பாதசாரிகளையும் அச்சுறுத்தும் வகையில் பேருந்தை மிக அசுர வேகத்தில் இயக்கி உள்ளார். மேலும், அரசு முற்றிலும் தடை செய்து உள்ள அதிகச் சத்த எழுப்பும் ஏர் ஹாரனை தொடர்ச்சியாகப் பிளிறவிட்டு, மற்ற வாகனங்களை அச்சுறுத்தி முந்திச் சென்று உள்ளார்.
பயணி எடுத்த வீடியோ வைரல்:

பேருந்தின் அதிவேகத்தைக் கண்டு அச்சம் அடைந்த பேருந்திற்குள் இருந்த பயணி ஒருவர், ஓட்டுநரின் இந்த ஆபத்தான செயல்பாட்டைத் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து உள்ளார். அச்சத்துடன் அவர் பதிவு செய்த அந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

அந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பேருந்து ஓட்டுநரின் பொறுப்பற்ற செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிரடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை:
தனியார் பேருந்துகளின் போட்டா போட்டி மற்றும் அதிவேகப் பயணத்தால் கோவை – திருப்பூர் சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்கின்றன.
எனவே, இந்த வைரல் வீடியோவின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தின் கண்டறிந்து, ஆபத்தான முறையில் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உடனடியாக அந்தத் தனியார் பேருந்தில் பொருத்தப்பட்டு உள்ள தடை செய்யப்பட்ட ஏர் ஹாரனை உடனடியாகப் பறிமுதல் செய்து நடவடிக்கை வேண்டும் எனக் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




