மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மேலக்கால் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக (VAO) முத்துக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார்.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ், பட்டா, சிட்டா, அடங்கள் மற்றும் சொத்து மதிப்பு சான்றுகள் போன்ற அத்தியாவசிய அரசு சான்றிதழ் பெறுவதற்காக ஆன்லைனில் பதிவு செய்து சரிபார்புக்காக இந்த அலுவலகத்தை நாடிச் செல்கின்றனர்.
அப்படி வரும் பொதுமக்களிடம், அரசு ஆவணங்களைச் சரிபார்த்து கையெழுத்திடவும், சான்றிதழ்களை வழங்க கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் வெளிப்படையாகவே லஞ்சம் பெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனை உறுதி செய்யும் வகையில், அவர் பணம் வாங்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு பொதுமக்கள் அலையாமல் இருக்க, அனைத்துச் சான்றிதழ்களையும் ஆன்லைன் மூலமாகவே எளிதில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்துள்ளது.
இருப்பினும், கள ஆய்வு மற்றும் இறுதி ஒப்புதலுக்காக கிராம நிர்வாக அலுவலகங்களை நாடுவது தவிர்க்க முடியாததாக உள்ள சூழலில், அங்குள்ள அலுவலர்கள் இதுபோன்று லஞ்சம் கேட்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கிராம நிர்வாக அலுவலகத்தில் தற்காலிக உதவி பணியாளர் மூலம் Google pay மூலமும் பணம் பெற்றதாக கூறப்படுகிறது

‘இணையவழி சேவைகளை அரசு கொண்டு வந்தும், அடிமட்ட அளவில் நடக்கும் இது போன்ற லஞ்சப் புகார்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்றும், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் முத்துக்குமார் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.





