தேனி மாவட்டம், குச்சனூர் பேரூராட்சியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, மாவட்ட அளவிலேயே குச்சனூர் பேரூராட்சி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் குச்சனூர் பேரூராட்சியில் உள்ள 12 வார்டுகளிலும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பணிகள் முறைப்படி தொடங்கப்பட்டன. இப் பணிக்காக நியமிக்கப்பட்ட 12 ஆசிரியர்களும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தரவுகளை சேகரித்து, மிகத் துல்லியமாகவும் விரைவாகவும் பணிகளை முடித்தனர்.
ஆசிரியர்களின் இந்த அர்ப்பணிப்பான உழைப்பினால், தேனி மாவட்டத்திலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை முழுமையாக முடித்த முதல் பேரூராட்சி என்ற பெருமையை குச்சனூர் பெற்றது.
இத்தகைய வரலாற்று சாதனைக்கு காரணமான ஆசிரியர்களை பாராட்டும் வகையில், குச்சனூர் பேரூராட்சி தலைவர் மற்றும் செயல் அலுவலர் ஆகியோர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பாக பணியாற்றிய 12 ஆசிரியர்களுக்கும் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
ஆசிரியர்களின் சுறுசுறுப்பான செயல்பாடும், பொதுமக்களின் முழுமையான ஒத்துழைப்புமே இச்சாதனைக்கு முக்கிய காரணம் என பேரூராட்சி நிர்வாகத்தினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.




