மதுரை சோழவந்தான் அருகே மேல கால் கொடிமங்கலம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் டூவீலரில் வந்து பட்டா கத்தி முனையில் பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறித்த மூன்று இளைஞர்களில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 6 மணிநேரத்தில் இரு இளைஞர்களை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசாருக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கொடிமங்கலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், கொடூர ஆயுதங்களுடன் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் பணம் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதாவது மதுரை – மேலக்கால் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த பெட்ரோல் பங்கில், நேற்று இரவு மதுரை பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் இரவு நேரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் திடீரென பெட்ரோல் பங்கிற்குள் நுழைந்து கைகளில் பெரிய கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களை ஏந்தியவாறு, பணியில் இருந்த ஊழியர் திருமுருகனை கடுமையாக மிரட்டி அவரிடம் இருந்த ரூபாய் 35 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

இந்தத் துணிகரக் கொள்ளைச் சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது
தகவல் அறிந்த நாகமலை புதுக்கோட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், பெட்ரோல் பங்கில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய இளைஞர்களைத் சமயநல்லூர் காவல் கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் உத்தரவின்பேரில் சார்பு ஆய்வாளர் உத்தராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணிகள் ஈடுபட்டனர்
இந்த நிலையில் சோழவந்தான் அருகே குருவித்துறை மலை பகுதியில் குற்றவாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை சுற்றி வளைக்க முற்பட்டபோது இருவர் பிடிபட்ட நிலையில் ஒருவர் தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

பிடிப்பட்ட இளைஞர்களிடம் பணம் மற்றும் பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் சோழவந்தான் அருகே முள்ளிப்புள்ளம் கிராமத்தை சேர்ந்த முத்து இளங்கோவன்(22) மற்றும் சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த மகாலிங்கம் (21) ஆகியோர்இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது மேலும் தலைமறைவான இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இரவு 10 மணிக்கு நடைபெற்ற இந்த திருட்டு சம்பவத்தில் போலீசாரில் துரித நடவடிக்கையால் ஆறு மணி நேரத்திற்குள்ளாக வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பேரில் இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சோழவந்தானில் வீட்டில் தனியாக இருந்த தனியார் பள்ளி ஆசிரியையிடம் பர்தா அணிந்து வீடு புகுந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு ஆசிரியை உட்பட இருவரை 24 மணி நேரத்திற்குள் போலீசார் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து இரு குற்ற சம்பவங்களில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.





