கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் மெர்சி ஊமன், பள்ளி தாளாளர் பிலிப் ஆர்.ஜே.பவுலர், கௌரவ பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஜே.ஞானதாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ முதல்வர் ஐலின் ஜெத்ரோ வரவேற்புரையாற்றி ஆண்டு அறிக்கை வாசித்தார். தொடர்ந்து பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், பள்ளியின் பத்து ஆண்டு சாதனைகளை வெளிப்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
பின்னர் சிறப்பு விருந்தினர் பிலிப் ஆர்.ஜே.பவுலர் பேசுகையில், ஸ்டேன்ஸ் கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களின் நிறுவனர் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் குறித்து வரலாற்றுச் சம்பவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இளம் வயதில் இந்தியா வந்த ராபர்ட் ஸ்டேன்ஸ், கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இறங்கியபோது, இப்பகுதியில் போதுமான கல்வி நிறுவனங்கள் இல்லாததை உணர்ந்தார். அந்தக் குறையை போக்கும் நோக்கத்தில்தான் ஸ்டேன்ஸ் பள்ளி உருவாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், கோவை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஸ்டேன்ஸ் நூற்பாலை மற்றும் ஸ்டேன்ஸ் மோட்டார்ஸ் ஆகிய தொழில் நிறுவனங்களையும் அவர் தொடங்கினார். அதன் மூலம் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என்ற பெருமையைப் பெறுவதற்கான அடித்தளத்தை அமைத்த முன்னோடியாக ராபர்ட் ஸ்டேன்ஸ் திகழ்ந்தார் என்றும் பிலிப் ஆர்.ஜே.பவுலர் குறிப்பிட்டார்.
மேலும், அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு மோட்டார் தொழில்நுட்பத்தின் மீது கொண் டிருந்த ஆர்வத்தையும் திறமையையும் ஊக்குவித்தவர்களில் முக்கியமானவர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்றும், தொழில் வளர்ச்சியும் கல்வி வளர்ச்சியும் ஒன்றோடொன்று இணைந்திருக்க வேண்டும் என்பதே அவரது பார்வை என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.




