கோவையில் டிராவல் ஏஜென்ட் அசோசியேஷன் ஆஃப் கோயம்புத்தூர் (TAAC) சார்பில் இரண்டாவது Luxury Travel Show இன்று கோலாகலமாக தொடங்கியது.
இந்த சுற்றுலா கண்காட்சியை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ். சதீஸ் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் கோவை சர்வதேச விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப், இந்திய சுற்றுலா துறையின் உதவி இயக்குநர் பத்மாவதி, TAAI தலைவர் தேவகி தியாகராஜன், IATO தென்னிந்திய மண்டலத் தலைவர் கே. பாண்டியன், TAFI நிர்வாகிகள் மற்றும் சுற்றுலாத் துறை முக்கிய பிரமுகர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த Luxury Travel Show-வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல்கள், ரிசார்ட்கள், விமான நிறுவனங்கள் மற்றும் பயண சேவை நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது புதிய சுற்றுலா திட்டங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தின.
மேலும், ஜப்பான் சுற்றுலா, சர்வதேச விமான சேவைகள், வெளிநாட்டு சுற்றுலா திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விளக்கக்காட்சிகள், அதிர்ஷ்டக் குலுக்கல், நிறுவனங்களின் தயாரிப்பு அறிமுகங்கள் மற்றும் நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சுற்றுலாத் துறையில் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த கண்காட்சி நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ். சதீஸ், கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட அரங்குகளை பார்வையிட்டு, பல்வேறு சுற்றுலா நிறுவனங்களின் சேவைகள் மற்றும் புதிய திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.




