மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் கழிவு நீர் கால்வாய் மற்றும் குடியிருப்பு பகுதி தெருக்களில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கான ஆய்வுப் பணிகளை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா மேற்கொண்டார்.

அப்போது அந்த பகுதி பெண்கள் தங்கள் பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் ஒன்று ஏற்படுத்தி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசியக்கூடிய இந்த பகுதியில் ரேஷன் கடை அங்கன்வாடி இல்லாததால் ஆபத்தான நிலையில் ரயில்வே மேம்பாலத்தை கடந்தும் ரயில்வே கேட்டை கடந்தும் சோழவந்தான் நகர் பகுதிக்கு ரேஷன் பொருட்கள் வாங்கவும் குழந்தைகளை அங்கன்வாடியில் சேர்க்கவும் செல்ல வேண்டிய நிலை உள்ளதாக பெண்கள் தெரிவித்தனர். 350 கார்டு மட்டுமே உள்ளதால் தற்போது ரேஷன் கடை அமைப்பதில் நிர்வாக சிரமங்கள் உள்ளதாக கூறிய எம்எல்ஏ 400 கார்டுகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ரேஷன் கடை அமைக்க முடியும் என்று கூறினார்.

உடனே அருகிலுள்ள 4வது வார்டு ஆலங்கொட்டாரம் பகுதி பொதுமக்கள் பசும்பொன் நகர் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு சேர்த்து ஒரே ரேஷன் கடையை நிரந்தரமாக அமைத்து தர வேண்டும். தற்போது ஆலங்கொட்டாரம் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை மட்டுமே உள்ளதாக அருகில் இருந்த கட்சி நிர்வாகிகள் கூறினார்கள், பின்னர் இதுகுறித்து அதிகாரிகளிடத்தில் கலந்து பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி 3வது வார்டு கவுன்சிலர் கொரியர் கணேசன் செயல் அலுவலர் செல்வகுமார் சுகாதார ஆய்வாளர் ஜெஸ்ஸி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்..




