தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் (திருப்பரங்குன்றம் வட்டம், மதுரை மாவட்டம்) சார்பில், ஓய்வூதியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளைக் களைய வலியுறுத்தி, மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடைபெற்றது.

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தினை தனியார் நிறுவனங்களுக்கு வழங்காமல், அரசே நேரடியாக ஏற்று நடத்த வேண்டும். அவசரக் காலத்தில் எந்தவிதத் தடங்கலுமின்றி கட்டணமில்லா (Cashless) சிகிச்சை முறையினை முழுமையாக உத்தரவாதப்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஓய்வூதியர்களுக்கென ‘ஓய்வூதியர் வார்டு’ போன்று தனி வசதிகளை உருவாக்க வேண்டும். புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான மாதச் சந்தா தொகை ரூ. 644/- பிடிப்பதைக் கைவிட/திரும்பப் பெற வேண்டும்.

காப்பீட்டு மருத்துவமனைகளை A1, A, B, C எனத் தரம் பிரிப்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர் (Co-ordinator) தலைமையில் குறைதீர்க்கும் கூட்டங்களை முறைப்படி நடத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




