கோழிப்பண்ணைத் துறையில் இளம் தலைமுறையினருக்கான தொழில்நுட்பம், முதலீடு, தொழில்முனைவு மற்றும் வணிக வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘ஸ்டார்ட்அப் கான்க்ளேவ் மற்றும் போல்ட்ரி எக்ஸ்போ பொள்ளாச்சியில் வரும் ஜூலை 29 மற்றும் 30 என இரு நாட்கள் பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது..

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது..
இதில், கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அமைப்பின் ராம்ஜி ராகவன் மற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் தியாகு ஆகியோர் பேசினர்..
இரண்டு நாள் நடைபெறும் இந்த எக்ஸ்போவில் கோழிப்பண்ணை வளர்ப்பு, தீவன உற்பத்தி, இனப்பெருக்க தொழில்நுட்பம், முட்டை உற்பத்தி, கால்நடை ஆரோக்கியம், உயிர் பாதுகாப்பு, நவீன உபகரணங்கள், பதப்படுத்தும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கண்காட்சி மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள் இடம்பெறுகின்றன.
மேலும், தொழில்நுட்ப கருத்தரங்குகள், நிபுணர்கள் கலந்துரையாடல், நேரடி செயல்முறை விளக்கங்கள், புதிய தயாரிப்புகள் அறிமுகம், தொழில்முனைவோர் – முதலீட்டாளர்கள் சந்திப்பு, வணிக ஒத்துழைப்பு வாய்ப்புகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

கோழிப்பண்ணை விவசாயிகள், தீவன உற்பத்தியாளர்கள், உபகரண உற்பத்தியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் சேவை நிறுவனங்கள் பங்கேற்கும் இந்நிகழ்வு, கோழிப்பண்ணைத் துறையின் வளர்ச்சிக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் முக்கிய தளமாக அமையும் என தெரிவித்தனர்…




