மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் ஊராட்சி பகுதியில் உள்ளது சிறுகுளம் கண்மாய் சுமார் 21 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக நகரமயமாதல் மற்றும் மக்களின் எண்ணிக்கையின் காரணத்தாலும் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தனக்கன்குளம் சிறு குளம் கண்மாயில் கொட்டப்பட்டு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சுற்றி இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளும் அங்கு கொட்டப்பட்டு வந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்படையவே இது குறித்த அப்பகுதி மக்கள் பலமுறை மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பிளாஸ்டிக் கழிவுகள்,கோழி கழிவுகள் கண்மாயில் கொட்டப்பட்டு அசுத்தம் செய்யப்படுவதாகவும் இதனால் துர்நாற்றம் வீசுவதோடு கொட்டப்படும் குப்பைகளுக்கு தீ வைத்து விட்டு செல்வதால் கரும்புகை கிளம்பி பல்வேறு நோய் ஏற்படுவதாகவும், இதனால் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் நிலத்தடி நீர் மாசடைந்ததோடு காற்றும் மாசு ஏற்படுகிறது கண்மாய் நீர் முழுவதும் விஷமாக மாறிவிட்டதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த கண்மாய் நீர் ஆதாரத்தை நம்பி விவசாயம் செய்த விவசாயிகள் வேறு வேலைக்கு சென்று விட்டதாகவும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டதாகவும் எனவே கண்மாயை தூர்வாரி நாங்கள் சிறுவயதில் பார்த்த சிறுகுளம் கண்மாய்க்கு புத்துயிர் கொடுத்து அதனை மீட்டுக் கொடுக்க வேண்டுமென தமிழக அரசுக்கு அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

நாம் அங்கு இதனை செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வீசும் துர்நாற்றத்தால் அங்கு இரண்டு நொடிகளுக்கு மேல் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டது. செய்தி சேகரிப்பதை பார்த்த அப்பகுதி பெண் அபிராமி சில பெண்களுடன் வந்து தாமாக முன்வந்து கண்மாயின் சூழ்நிலையை வேதனையுடன் தெரிவித்தார்.




