புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சவரியம்மாள் என்பவர் தனது கணவர் ஜோசப் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டார் என்று சொல்லி போலிப் பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள எனது சொத்துகளை அபகரித்து விட்டார்கள் என்று பரபரப்பு புகாரை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில் நான் சவரியம்மாள். எனக்கு சொந்தமான நிலம் 50 ஏக்கருக்கு மேல் குன்னத்தூர் கிராமத்தில் இருக்கிறது. நான் தற்போது திருச்சி பொன்மலைப்பட்டியில் எனது தாய் வீட்டில் வசித்து வருகிறேன். எனது சித்தப்பா மகன் தான் எங்களுடைய சொத்துக்களை மற்றவர்களிடம் விற்பனை செய்து இருக்கிறார். கணினிச் சிட்டா உள்ளிட்ட அனைத்தையும் மாற்றி விட்டார்கள். பழைய பத்திரங்கள் மூல ஆவணங்கள், 2024 ஆம் ஆண்டு வரை கட்டிய வரி ரசீதுகள் எல்லாம் என் பெயரில் தான் இருக்கிறது.
எனவே அனைத்தையும் மாற்றி தரச் சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் இப்போது மனு கொடுக்க வந்திருக்கிறேன். மேலும் உயிரோடு இருக்கும் எனது கணவரை இறந்து விட்டார் என்று போலி பத்திரம் தயாரித்த நபர்கள் மீதும் காவல்துறையில் இன்று மனு கொடுக்க இருக்கிறேன் என்று வேதனையுடன் தெரிவித்தார்.




