மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலக்கால் ஊராட்சி கீழ மட்டையான் கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நர்சரி கார்டன் அமைக்க மேலக்கால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து நர்சரி கார்டன் அமைப்பதற்கான இடத்தில் மேலக்கால் ஊராட்சி சார்பில்அதற்கான தடுப்பு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டது இந்த நிலையில் கீழ மட்டையான் கிராமத்தைச் சேர்ந்த சிலர் தனிப்பட்ட விரோதம் காரணமாக நர்சரி கார்டன் அமைப்பதற்காக போடப்பட்ட தடுப்பு கம்பி வேலிகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஊராட்சி செயலாளர் விக்னேஷ் சார்பில் காடுபட்டி காவல் நிலையத்தில் நர்சரி கார்டன் தடுப்பு கம்பி வேலிகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் கீழ மட்டையான் கிராமத்தைச் சேர்ந்த சிலர் நர்சரி கார்டன் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தடுப்பு கம்பி வேலிகளை தாங்கள்தான் சேதப்படுத்தினோம் என ஊராட்சி செயலாளர் அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி செயலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் நர்சரி கார்டனை சேதப்படுத்தியவர்கள் கிராமத்தில் ஒரு சிலரை அழைத்துக் கொண்டு வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் உள்ள திருவேடகத்திற்கு சென்று வாடிப்பட்டி வட்டாட்சியர் இடத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது நர்சரி கார்டன் அமைப்பதற்காக போடப்பட்ட தடுப்பு வேலிகளை சேதப்படுத்தியவர்கள் தெரியாமல் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என அதிகாரிகளிடம் கிராமத்தின் சார்பில் பேசப்பட்டது. ஆனால் அதிகாரிகள் தரப்பில் அரசு சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எப்படி இருக்க முடியும் மேலும் சேதப்படுத்திய தடுப்பு வேலிகளை சம்பந்தப்பட்ட நபர்கள் தான் சரி செய்து தர வேண்டும். அதற்கு உண்டான செலவுகளை அவர்களிடமிருந்து வசூல் செய்து கிராமத்தினர் தடுப்பு கம்பி வேலிகளை அமைத்து தர வேண்டுமென அதிகாரிகள் தரப்பில் பேசப்பட்டது.
இதன் காரணமாக வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பான மற்றும் பதட்டமான சூழ்நிலையும் காணப்பட்டது. ஊராட்சி சார்பில் நர்சரி கார்டன் அமைப்பதற்காக போடப்பட்ட தடுப்பு கம்பி வேலிகளை சேதப்படுத்தியதாக கூறப்படும் நபர்கள் தாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று கூறியதாக கூறும் நிலையில் ஊராட்சி சார்பில் தடுப்பு கம்பி வேலிகளை சேதப்படுத்தும் போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் தாங்கள் தான் நர்சரி கார்டன் தடுப்பு கம்பிவேலிகளை சேதப்படுத்தினோம் என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஆதாரத்தையும் ஊராட்சி செயலாளர் அதிகாரி இடத்தில் காண்பித்த நிலையில் வேறு வழியில்லாமல் கிராமத்தில் உள்ள சிலரை எப்படியும் கைது செய்து விடுவார்கள் என்ற நிலையில் கிராமத்தினர் சேதப்படுத்தியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது.

இல்லையென்றால் கிராமத்தினர் அனைவரையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரண்டு நாட்களில் சேதப்படுத்தப்பட்ட நர்சரி கார்டன் தடுப்பு வேலியை கிராமத்தின் சார்பில் அமைத்து தருவது என்றும் சேதப்படுத்தியவர்கள் மீது அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் பேசப்பட்டு தற்காலிகமாக கிராமத்தினர் கலைந்து சென்றனர். அரசு சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த நிலைவரை சென்றிருக்காது எனவும் மேலும் தவறு செய்தவர்களை பாதுகாப்பதற்காக கிராமத்தினர் அதிகாரிகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. தவறுசெய்தவர்கள் மேலும் தவறு செய்வதற்கு வழி வகுக்கவே செய்யும் எனவும் அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டனர்




