மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் முறையாக மூடப்படாத நிலையில் பல்வேறு இடங்களில் ஆபத்தான நிலையில் பள்ளங்கள் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகர் பகுதியில் பழைய வெற்றிலை கொடிக்கால் சங்கம் எதிரில் கழிவுநீர் செல்லக்கூடிய கால்வாய் பராமரிக்க படாமல் உள்ளது. இந்தப் பகுதி சோழவந்தான் வாடிப்பட்டி செல்லும் முக்கிய சாலையாக உள்ளது தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்த பகுதியில் சென்று வருகிறது. மேலும் திருமால் நத்தம் ரிஷபம் பசும்பொன் நகர் ஆலங்கொட்டாரம் மீனாட்சி நகர் போன்ற பகுதிகளில் இருந்து சோழவந்தான் நகருக்குள் வரும் பொதுமக்கள் இந்த பகுதியில் வருகின்றனர்.

ஆனால் சாலையின் நடுவே கழிவு நீர் கால்வாயில் சீரமைக்கப்படாத பெரிய பள்ளம் உள்ளது இந்த பள்ளத்தில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடந்து செல்ல கடும் சிரமம் ஏற்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வருபவர்கள் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். ஆகையால் அதிகாரிகள் இந்த பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பகுதியில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ள நிலையில் அந்த பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகளும் பள்ளங்களில் விழுந்து விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர். ஆகையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் நலன் கருதி உடனடியாக இந்த பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.





