மதுரை விமான நிலையத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 42.5 °C ஆக பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 5.5 °C அதிகம் மற்றும் இந்தியாவில் இன்று பதிவான அதிகபட்ச வெப்ப நிலை என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்றும் மதுரையில் வெப்பநிலை 41 °C ஆகப் பதிவானது.

கரூர், திண்டுக்கல், நீலகிரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் நேற்று வெப்பநிலை இயல்பைவிட 5.1 °Cக்கு அதிகமாகப் பதிவாகியது.
திருத்தணி , வேலூர் , மதுரை விமான நிலையம் மற்றும் நகரம், பாளையங்கோட்டை , கரூர் பரமத்தி, கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் இன்று வெப்பநிலை 5.3 °Cக்கு மேல் பதிவாகியது. உச்சமாக ஊட்டியில் இன்று இயல்பை விட 7.4 °C அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழ் நாட்டில் இரண்டு நாட்களாக பல மாவட்டங்களில் வெப்ப அலை வாட்டி வதைக்கிறது. ஆனால், போதுமான முன்னெச்சரிக்கையை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வழங்கவில்லை. நேற்று வழங்கப்பட்ட முன்னெச்சரிக்கையில் கூட 13-07-2026 முதல் 16-07-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-4° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று மட்டுமே கூறப்பட்டிருந்தது.
உள் தமிழகப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதாவது ஜூலை 14 மற்றும் ஜூலை 15 தேதிகளில் வெப்ப அலை நிலவும் என்கிற சிறப்பு எச்சரிக்கையை இன்று மாலை 3 மணிக்குதான் சென்னை வானிலை ஆய்வு மையம் வழங்கியது.

தமிழ் நாடு பேரிடர் மேலாண்மை ஆணையமும் போதுமான முன்னெச்சரிக்கைகளை வழங்கவில்லை. சமூக வலைதளங்களில் கூட (குறிப்பாக X தளம்) ஜனவரி மாதத்துக்குப் பிறகு தமிழ் நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு பதிவைக் கூட இடவில்லை.
பெருமழை நிகழ்வுகளுக்கு நிகராக வெப்ப அலை எச்சரிக்கை வழங்குவதிலும் கூடுதல் கவனத்தோடு அரசுகள் செயல்பட வேண்டும். வானிலையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும் எல் நினோ காலத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் ஒன்றிய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்.

இன்னும் சில நாட்களுக்கு வெப்ப அலை தாக்கம் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களுக்குத் தேவையான விழிப்புணர்வை வழங்குவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும். பல நீர்நிலைகள், ஆறுகள் வறண்டுள்ள நிலையில் வேளாண்மை மற்றும் குடிநீர் விநியோகத்திற்கான நீர் கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து மாநில அளவில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழ் நாடு அரசை வலியுறுத்துகிறேன். மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.




