தேனி மாவட்டம் போடியில் வடக்கு மாவட்ட தி.மு.க., போடி ஒன்றிய தி.மு.க., மற்றும் இரட்டை மாட்டு வண்டி சங்கம் இணைந்து தமிழக முதல்வரின் மகனும், எம்.எல்.ஏ.,வு மான உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு, 3ம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று (டிச.26) நடந்தது. போடி தி.மு.க., ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான லெட்சுமணன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட பிரதிநிதி விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப் பாளர் பழனிகுமார் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட செயலாளரும், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எல். மூக்கையா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
புள்ளிமான் 24 ஜோடிகளும், தட்டான் சீட்டு 28 ஜோடிகளும், தேன்சிட்டு 37 ஜோடிகளும், பூஞ்சிட்டு 30 ஜோடிகளும், கரிச்சான் சிட்டு மாடுகள் 18 ஜோடிகளும், நடு மாடு 10 ஜோடிகளும், பெரிய மாடு 10 ஜோடிகள் என, மொத்தம் 159 இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றன.
போடி மூணாறு சாலையில் உள்ள சி.பி.ஏ., கல்லூரி அருகில் இந்த எல்கை மாட்டுவண்டி பந்தயம் துவங்கி, குரங்கணி சாலையிலுள்ள முந்தல் வரை சீறிப் பாய்ந்து, அதேவேகத்தில் மீண்டும் மாட்டு வண்டிகள் திரும்பி வந்தன.
போடி நகர இன்ஸ்பெக்டர் சரவ ணன் தலைமையில் ஏராளமான போலீசார் வழிநெடுக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இறுதி கட்டத்தில் வேகமாக ஓடுகிற போது மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தப் பந்தயத்தில் நுழைவு கட்டணமாக புள்ளிமான் சீட்டுக்கு 500 ரூபாய், தட்டான் சிட்டுக்கு 600, தேன் சிட்டு 800, நடுமாடு 1,500, பெரியமாடு 2,500 என, பந்தயத்தில் பங்கேற்றவர்கள் நுழைவு கட்டணம் செலுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் முதல் 25,000, 20,000 , 2,000 ம் என்ற அடிப்படையில் பரிசுத் தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது. மேலும் வென்ற காளைகளுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.