புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு கொடுத்திருக்கிறார்.

இது குறித்து அவர் கூறுகையில் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நெட்டூத்துக்கரை எந்த பகுதியில் பாசனக்குளமாக இருந்த 16 ஏக்கர் நிலப்பரப்பை ஒரு ஏக்கர் மட்டும் விட்டு வைத்து விட்டு 15 ஏக்கரை வீடுகள் கட்டி சுமார் 200 குடும்பங்கள் குடியிருந்து வருகிறார்கள். அதனால் எங்களது ஊருக்கு வரும் மழை நீர் வரத்து நீர் பாதிக்கப்பட்டுள்ளதால் எங்களது ஊரைச் சேர்ந்த ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு மேல் விவசாயம் செய்ய முடியாமல் தைல மரக்கன்றுகளை நடவு செய்துள்ளோம். ஊர் வறட்சியாகிவிட்டது. விவசாயங்கள் அழிந்துவிட்டன.

இது குறித்து அறிந்த நான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் பேரில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கும் நிலத்தை எடுத்து மீண்டும் குளமாக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் தொடர்ந்து அது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அளவில் சம்பந்தப்பட்ட இடத்தில் போய் நின்ற போதும் நிலத்தை அளவீடு செய்ய முடியவில்லை. இது குறித்து நீதிமன்றத்திற்கு நான் பலமுறை தகவல்கள் தெரிவித்திருக்கிறேன். இப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அந்த நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து விரைவில் அவற்றை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள்.

இதற்கிடையில் இதற்கு காரணமாக நான் தான் இருக்கிறேன் என்பதை கருதிக் கொண்டிருப்பவர்களால் எனது உயிருக்கும் உடைமைகளுக்கும் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடி நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இதே போல் குவாரிகள் எடுத்து சட்ட விரோதமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் ஜகபரலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து சில நாட்களிலேயே அவரை லாரி ஏற்றிக் கொன்று விட்டார்கள். அதுபோல் எனக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்ற பயம் எனக்கு வந்திருக்கிறது. பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.





